எலியா என்றால் ‘யெகோவா என் தெய்வம்’ என்று பொருள். எலியா கீலேயாத் நாட்டில் ‘திஸ்பி’ என்ற ஊரில் பிறந்தார். இவரது செயல்களையும் அனுபவங்களையும் நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். தீர்க்கத்தரிசனங்களாகச் சிலவற்றையும் கூறுகிறார். எலியாவின் அற்புதங்கள் பெரும்பாலும் அக்கினியை முன் நிறுத்தும். சுழல் காற்றில் பரலோகம் சென்றவர்.

ஆகாபின் அவிசுவாச மகனாகிய அகசியா மரணப் படுக்கையில் கிடந்தான். அவன் இஸ்ரவேலின் தேவனை நாடாமல், எக்ரோனின் தேவனாகிய பாகால்-சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான். கர்த்தருடைய தூதனோ எலியாவை அவர்களுக்கு எதிரே அனுப்பினார். எலியா, “இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்-சேபூபிடத்தில் விசாரிக்கப் போகிறீர்கள்? இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்றார்.

அவர்கள் அரசனிடம் அந்தச் செய்தியைச் சொன்னபோது, எலியாவைத் தன்னிடம் அழைத்து வர அகசியா கட்டளையிட்டான்.

அப்படியே முதலில் ஐம்பது பேர் எலியாவிடம் சென்று மிகவும் ஆணவமாய் அவரை அழைத்தனர். எலியா, “நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது” என்றார். உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அந்த ஐம்பதுபேரையும் பட்சித்தது.

இதை அறிந்த ராஜா மறுபடியும் ஐம்பது பேர் கொண்ட ஒரு குழுவை எலியாவை அழைத்துவர அனுப்புகிறான். அவர்களும் எலியாவிடம் ஆணவத்தோடு நடந்து கொள்ள, எலியாவின் வாக்குப்படி அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவர்களையும் பட்சித்துப் போட்டது.

ஈக்களின் ஆண்டவன் என்ற அர்த்தம் கொண்ட பாகால்-சேபூப் ஒரு கடவுளே அல்ல; வானத்தையும் பூமியையும் அதிலுள்ள யாவையும் படைத்த நம் தேவனே சர்வ சிருஷ்டிகர் என்பதை எலியா நிரூபிப்பதைக் காண்கிறோம்.

இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது. அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். (மாற்கு 9:2-4) இங்கு எலியா மிகுந்த தேவ பக்தி உள்ளவராகவும், இயேசு அவரை மிகவும் நேசிப்பவராகவும் காணப்படுகிறார்கள்.

அகசியா ராஜா மரித்த சில நாட்களுக்குப் பின், யோராம் ராஜாவுக்கு ஒரு நிருபம் அனுப்பி அவனுக்கும் அவன் வீட்டாருக்கும் வரப் போகிற வாதையை அறிவித்தார். (2 நாளா. 21:11-15).

கர்த்தரின் நாள் வருமுன்பே எலியா தீர்க்கத்தரிசி மறுபடியும் அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

(மல் 4:5) கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாளில் கர்த்தர் பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவதற்காக எலியா தீர்க்கத்தரிசி மறுபடியும் அனுப்பப்படுகிறார்.

விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இவைகளின் பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். (கொலோ. 3:5-6)

அன்றைய இஸ்ரவேல் ஜனங்களுக்கு எலியா அளித்த எச்சரிக்கை நமக்கும் இன்றைக்குப் பொருந்தும்.

எலியாவின் ஜீவியம் ஒரு சந்நியாசியின் ஜீவியம் போல இருந்தது. எலியா இஸ்ரவேலருக்குள் மகா விசித்திரமான பக்தி உள்ளவர். ஓரேப் தேவ பர்வதத்தில் ஒரு கெபியில் தங்கியிருந்த எலியாவுக்கு தேவனிடமிருந்து வந்த கேள்வி: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்? அதற்கு எலியாவின் பதில்:

  1. “சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்தி வைராக்கியமாயிருந்தேன்;”
  2. “இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்;”
  3. “நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்.”

ஆனால் தேவன், தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணினார்.

இஸ்ரவேலின் நியாயத்தீர்ப்புக்காக ஆசகேலையும், யெகூவையும், சீரியாவின் மேலும், இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக அபிஷேகம் பண்ணச் சொன்னார், எலியாவின் ‘நான் ஒருவன் மட்டும்’ என்ற புலம்பலுக்குப் பதிவாக, தேவன், ஏழாயிரம் பேர் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்.

தேவன் நமக்குச் சில பொறுப்புகளைக் கொடுத்தால், நம்மைச் சில இடங்களில் வைத்தால் அதனைத் தள்ளி விட்டு ஓட முயலக் கூடாது.

அவிசுவாசம், மனக்குழப்பம் நிறைந்த இருட்டுக் குகையில் வாழ எண்ண வேண்டாம்.

முன்மாதிரியான, அற்புதமான தேவ ஊழியர் எலியா. சிறந்த தீர்க்கத்தரிசி. புனித ஸ்தலங்கள், புனித கோபுரங்கள், புனித குளங்கள் தேவைதான். அதை விட எலியாவைப் போன்ற துணிவான கர்த்தருக்குக் கீழ்ப்படிகிற அதிசயமான வாழ்வு வாழ முயற்சி செய்வோம்.

கடவுளின் வார்த்தைகள் வல்லமை நிறைந்தது... ஜீவன் உள்ளது... அந்த தேவ வார்த்தைகளை விசுவாசிக்க வேண்டும். நம்பினால் அத்புதம் நடக்கும். எலியா தீர்க்கத்தரிசி செய்த ஏழு அற்புதங்களை இந்நூலில் விளக்கியுள்ளேன், அவை உங்கள் வாழ்க்கையைப் பிரகாசிக்கச் செய்யும்.

நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவில் அற்புதங்களைச் செய்வார். (யோசு. 3:5)



முன்னுரை அணிந்துரை ஆசிரியர் உரை-1 மாவும் எண்ணெய்யும்
பெருகியது
விதவையின் மகன்
உயிர் பெற்றது

ஆகாபும் எலியாவும் எலியாவும் காகங்களும் அக்கினியால் அற்புதம் ஆகாப்-யேசபேலும்
எலியாவும்
சுழல் காற்றில் எலியா
பரலோகம் சென்றது

ஆசிரியர் உரை-2 எங்கள் வாழ்வில்
அற்புதங்கள்
நன்றியுரை


Go to top